சபரிமலையில் இல்லாத ஆசாரங்களை உருவாக்க வேண்டாம்: தந்திரி வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 05:12
சபரிமலை: சபரிமலையில் இல்லாத ஆசாரங்களை உருவாக்கி அதை பின்தொடர வேண்டாம் என்று சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பக்தர்கள் கண்ட இடங்களில் தேங்காய் உடைப்பது, பாதைகளில் கற்களை அடுக்கி வைப்பது, கழுத்தில் அணிந்த மாலையை ஆங்காங்கே போட்டு செல்வது, பம்பையில் உடுத்திருந்த ஆடைகளை வீசுவது போன்ற இல்லாத ஆசாரங்களை பக்தர்கள் உருவாக்குகின்றனர். ஒருவர் செய்தால் அதை மற்றவர்களும் பின் தொடர்கின்றனர். இப்படிப்பட்ட ஆசாரம் சபரிமலையில் கிடையாது.
சபரிமலையை பொறுத்த வரை குரு சங்கல்பத்தில்தான் எல்லாம் நடக்கிறது. குருசாமி கையால் மாலை அணிய வேண்டும். அவர் தரும் அறிவுரைகளை கேட்க வேண்டும். 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். சபரிமலை பயணம் முடிந்த பின்னர் எந்த கோயிலில் மாலை போட்டார்களோ அந்த கோயில் அல்லது ஏதாவது ஒரு கோயிலில் மாலை கழற்ற வேண்டும். அதுவும் குருசாமி வழியாகதான் செய்ய வேண்டும். இதை தவிர்த்து சபரிமலை, பம்பையில் கழற்றி போட்டு விட்டு செல்லக்கூடாது. இது பெரும்பாலும் கேரளாவை தவிர்த்த இதர மாநில பக்தர்கள்தான் செய்கின்றனர். குருசாமிகள் பக்தர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அதுபோல மாளிகைபுறம் கோயிலிலும் பக்தர்கள் தேவையற்ற செயல்களை செய்கின்றனர். நாகர் சிலைகள் மீது மஞ்சள், பொரி அவல் தூவுவது, பக்தர்கள் மீது பன்னீர் தெளிப்பது, பிளவுஸ் துணிகளை கோயில் கோபுரத்தின் மீது வீசுவது இவை எல்லாம் இல்லாத ஆசாரங்கள் ஆகும். இதை பக்தர்களாக நினைத்து தவிர்க்க வேண்டும். 18-ம் படி ஏறும் போது ஒரு தேங்காய் உடைக்க வேண்டும். திரும்ப செல்லும் போது ஒரு தேங்காய் உடைக்க வேண்டும். அதற்கான இடத்தில் மட்டுமே உடைக்க வேண்டும். சபரிமலை வரும் பக்தர்கள் ஒழுக்க நெறிகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். வனப்பகுதிகளை அசுத்தம் செய்யக்கூடாது. ஐயப்பனின் பூங்காவனத்தை சுத்தமாக பராமரிக்கும் பொறுப்பை ஒவ்வொரு பக்தரும் கடமையாக நினைத்து நிறைவேற்ற வேண்டும். இந்த சீசனில் காலை 3 முதல் பகல் ஒரு மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் நடை திறந்திருப்பதால் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையிலேயே தரிசனம் முடிந்து பக்தர்கள் ஊர் திரும்ப முடிகிறது. 18-ம் படியேற கூட்ட நெரிசல் உள்ளது. இது தவிர்க்க முடியாதது. நடப்பு சீசன் இதுவரை நன்றாக போய் கொண்டிருக்கிறது. இனியும் அப்படி தொடர வேண்டும் என்று ஐயப்பனிடம் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.