பதிவு செய்த நாள்
17
டிச
2016
03:12
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
ராசிநாதன் செவ்வாய் சாதகமாக உள்ள நிலையில் புதிய ஆண்டு மலர்கிறது. இந்த ஆண்டு ஜன.16ல் குருபகவான் 7-ம் இடத்திற்கு அதிச்சாரமாக செல்வது சிறப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். செல்வாக்கு மேம்படும். கை நிறைய காசு... பை நிறைய நோட்டு என்ற நிலையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். ராகு பகவான் 5-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். ஜூலை 26ல் இடம் பெயர்ந்து கடகத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. குடும்ப பிரச்னைகளால் மனக்குழப்பம் ஏற்படலாம். கேது தற்போது 11ம் இடமான கும்பத்தில் உள்ளார். பொருளாதார வளம் மேம்படும். ஜூலை 26ல் அவர் 10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். இதன் பின் நன்மை உண்டாகாது. சனி இப்போது 8ல் இருக்கிறார். இதனால் சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். சனி ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்கிரம் அடைவதால் கெடுபலன் உண்டாகாது. டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுவதால் முயற்சிகளில் தடை குறுக்கிடலாம். மேற்கண்ட நிலையில் இருந்து ஆண்டுக்கான விரிவான பலனைக் காண்போம். குடும்பத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். புதிய உறவினர்களால் நன்மை ஏற்படும். புதிய வீடு, சொத்து வாங்க யோகம்உண்டாகும். புதுமணத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரத்தில் ஈடுபட வாய்ப்புண்டாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த ஏப்.10க்கு பிறகு நல்ல காலம். மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் வளர்ச்சிக்கு குறைவிருக்காது.
பணியாளர்கள்: கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மறையும். படித்து முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். மார்ச்10க்கு பிறகு சிலர் விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். ஆக.31க்கு பிறகு தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்கள்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானம் காண்பர். ரசிகர் மத்தியில் புகழ், பாராட்டு வரும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சற்று பொறுமை காக்கவும். அதன் பிறகு எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.
அரசியல்வாதிகள்: தொண்டர் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பர். அரசியல்ரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்வர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல் தொழில் புரிவோர் சிறந்த நிலை பெறுவர்.
மாணவர்கள்: மாணவர்களுக்கு வெற்றி கிட்டும். தேர்வில் மதிப்பெண் அதிகம் பெறுவர். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
விவசாயிகள்: எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும். சிலர் நவீன கருவிகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். புதிய சொத்து வாங்க யோகமுண்டாகும். ஜூலை 26க்கு பிறகு
அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பெண்கள்: பிள்ளைகளின் செயல்பாடு பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன், பொருள் வந்து சேரும். வேலை செய்யும் பெண்கள் வளர்ச்சிநிலை காண்பர். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
செல்ல வேண்டிய கோவில்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.
பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜை செய்யலாம். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபமேற்றி வழிபடுங்கள்.