நட்பு கிரகமான செவ்வாய் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. குருபகவான் ஜன.16ல் 2-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை ஏற்பட்ட இடர்பாடு அனைத்தும் விலகும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். ஆனால் மார்ச்10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் நற்பலன் சற்று குறையலாம். சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். பொன்மகளான லட்சுமியின் அருளால் பொருளாதாரம் பன்மடங்கு அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். விருச்சிக ராசியில் இருக்கும் சனிபகவான் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைகிறார். இதனால் நற்பலன் சற்று குறையலாம். சனிபகவான் டிச.18 விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
இது சிறப்பான நிலை அல்ல. குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். ராகு தற்போது ராசிக்கு 12-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் பணபிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஜூலை 26ல் ராகு ராசிக்கு 11-ம் இடமான கடகத்திற்கு செல்வது சிறப்பாகும். பெண்களால் நன்மை கிடைக்கும். கேது தற்போது 6ல் இருப்பதால் பொன், பொருள் சேரும். அவர் ஜூலை 26ல் 5-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் அரசு வகையில் பிரச்னையைத் தரலாம். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவுஇருக்காது. தேவை அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகமுண்டு. சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில் வியாபாரம்: வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். போட்டியாளரால் இடையூறு குறுக்கிட்டாலும் சாதுர்யமாக முறியடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் அரசு வகையில் நன்மை கிடைக்கும். ஜூலை26க்கு பிறகு கேதுவால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடலாம். முக்கியப் பொறுப்புகளை நேரடிப்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
பணியாளர்கள்: மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிச்சுமை ஏற்படலாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் அதன் பிறகு உங்களுக்கு சாதகமான காற்று வீசும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முன்னேற்றம் காணலாம். தொழில் ரீதியான அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். மார்ச் 10 முதல் ஆக.31 வரை புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதன் பிறகு நிலைமை சீராகும்.
அரசியல்வாதிகள்: மக்கள் பணியில் ஈடுபட்டு வளர்ச்சிநிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கவும் யோகமுண்டாகும்.
மாணவர்கள்: குருவால் கல்வியில் வளர்ச்சி நிலை காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்குடன் விளங்குவர். சிலர் கல்வியில் சாதனை படைப்பர்.
விவசாயிகள்: சீரான வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆண்டின் முற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கூலி வேலை செய்பவர்கள் அதிக வருமானம் காண்பர். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன சொத்து மீண்டும்கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
செல்ல வேண்டிய கோவில்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்.