பதிவு செய்த நாள்
17
டிச
2016
03:12
நினைத்ததை முடிக்க விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் குரு பகவான் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நன்மை உண்டாகும். ஜன.16ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு அதிசாரமாக செல்வது சுமாரான நிலையே. இங்கு அவரால் வீண் அலைச்சல், மனக்குழப்பம் உருவாகலாம். ஆனால், இந்த பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வசந்தகாலமாக குரு மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைகிறார். இதனால் குடும்பத்தில் நன்மை மேலோங்கும். வளர்ச்சி பெருகி எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். ராகு தற்போது 10-ம் இடமான சிம்மத்தில் இருந்து மனைவியால் பிரச்னை ஏற்படலாம். ஜூலை 26ல் ராகு 9-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் சுமாரான பலனே உண்டாகும். கேது 4-ம் வீடான கும்பத்தில் இருப்பதால் உடல்நலக்குறைவு உருவாகலாம். ஜூலை 26ல் கேது 3-ம் இடமான மகரத்திற்கு வருவதால் பிரச்னை அனைத்தும் விலகும். பொருளாதார வளம் சிறக்கும்.
இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில் வளம் பெருகும். சனி பகவான் ராசியிலேயே இருப்பதால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். அவரது 3-ம் பார்வையால் செயலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் நிலைக்கும். ஏப்.10 முதல் ஆக. 6 வரை சனி வக்ரம் அடைவதால் கெடுபலன் தர மாட்டார் அவர் ஆண்டு இறுதியில் (டிச.18) உங்கள் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற இருக்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். கணவன்-, மனைவி இடையே அன்பு மேலோங்கும். குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம். ஜூலை26க்கு பிறகு முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரம்: தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். ஏழரை சனி என்பதால் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையான சமயத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். மார்ச்10க்கு பிறகு வருமானம் போதுமான அளவில் இருக்கும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். தொழிலாளர் ஆதரவு சிறப்பாக அமைந்திருக்கும்.
பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான பலன் கிடைக்கப் பெறுவர். வேலைப்பளுவும், அலைச்சலும் ஏற்படலாம். ஆனால் மார்ச்10க்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் மத்தியில் மதிப்பு உயரும். முயற்சி செய்தால் அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். மார்ச் 10க்குப் பிறகு முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை போதிய வருமானம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
மாணவர்கள்: குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆனால் அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் பணப்பயிர்களைப் பயிரிட வேண்டாம். மானாவாரி விவசாயத்திலும், நெல், கோதுமை, பழவகைகள், கேழ்வரகு போன்ற பயிர்களிலும் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூலை 26க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்புண்டு. ஆடம்பர செலவைக் குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உறவினர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
செல்ல வேண்டிய கோவில்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.