கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நல்ல நேரம் வந்தாச்சு கல்யாண யோகம் வந்தாச்சு (65/100)
பதிவு செய்த நாள்
17
டிச 2016 03:12
நற்செயல்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் கும்ப ராசி அன்பர்களே!
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. குரு பகவான் ஜன.16ல் 9-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் குருவருளால் சிறப்பாக நடந்தேறும். குருவின் 9-ம் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் சற்று நன்மை குறையும். ராகு ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் வெளியூருக்குச் செல்லும் சூழல் உருவாகி இருக்கலாம். முயற்சியில் தடங்கல் வந்திருக்கலாம். ஜூலை26ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பிரச்னை அனைத்தும் விலகும். வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும். கேது ராசியில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தி இருக்கலாம். ஜூலை 26ல் 12-ம் இடமான மகரத்திற்கு போவதால் பிற்போக்கான நிலை மறையும்.
சனிபகவான் ராசிக்கு 10ல் இருப்பதால் தொழிலில் பிரச்னை ஏற்படலாம். ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் கெடுபலன் தர மாட்டார். டிச.18ல் சனி தனுசு ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டு.
தொழில், வியாபாரம்: ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். வீண் அலைச்சல், தடைகளைச் சந்திக்க நேரிட்டாலும் ஜூலை 26க்கு பிறகு நிலைமை சீராகும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழிலிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். தொழிலாளர்களின் ஆதரவு சீராக கிடைக்கும்.
பணியாளர்கள்: பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவர். எதிர்பார்த்த கோரிக்கை தடையின்றி நிறைவேறும். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அதன் பிறகு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க யோகம் உண்டாகும். படித்து முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானம் காண்பீர்கள். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விடாமுயற்சி தேவைப்படும். பயணத்தின் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள்: பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி வந்து சேரும். மறைமுக எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவீர்கள். தொண்டர் நலனுக்காக பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: சீரான பலனைக் காணலாம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை முயற்சியுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
விவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலனைக் காணலாம். ஜூலை 26க்கு பிறகு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் மகசூல் அதிகரிக்கும். ஜூலைக்கு பிறகு வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டாகும்.
பெண்கள்: பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. அடிக்கடி சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
செல்ல வேண்டிய கோவில்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில்.
பரிகாரம்: விநாயகரைத் தவறாமல் வழிபடுங்கள். பவுர்ணமி அன்று அம்மன் கோவிலில் வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வணங்குங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை தரிசியுங்கள். சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுங்கள்.
|