சபரிமலையில் தங்க கொடிமர பீடம் அடிக்கல்: ஏப்.7ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 12:12
சபரிமலை: சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் அமைப்பதற்கான பீடம் அடிக்கல் நாட்டு விழா ஏப்., ௭ல் நடக்கிறது.சபரிமலையில் தற்போதய கொடிமரம் மாற்றப்பட்டு புதிய தங்க கொடிமரம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரான்னி காட்டில் இருந்து தேக்கு மரம் வெட்டப்பட்டு, பம்பையில் அது வடிவமைக்கப்பட்டு எண்ணெய் தோணியில் ஊற வைக்கப்பட்டுள்ளது. செப்புத் தகடுகள் சபரிமலையில் பூஜிக்கப்பட்டு, ஆலப்புழா மாவட்டத்தில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மகரவிளக்கு காலம் ஜன.,20ல் நிறைவு பெற்ற உடன் தற்போதுள்ள கொடிமரத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும். இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பாக மூன்று நாள் சிறப்பு பூஜை நடைபெறும்.தற்போதுள்ள கொடிமரத்தின் மேற்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வாஜி வாகனத்தின் சக்தியை ஐயப்பன் விக்ரகத்தில் ஆவாகிக்கும் சடங்கு நடக்கும் அதன் பின் கொடிமரம் முழுமையாக மாற்றப்படும். தொடர்ந்து புதிய கொடிமரம் அமைப்பதற்கான கல்பீடம் கட்டும் பணி தொடங்கும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2017 ஏப்., ௭ காலை 10:45 மணிக்கு நடக்கும்.ஜூன் 25 காலை 11:50 மணிக்கு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படும். நான்காம் கலச பூஜை முடிந்ததும் கொடியேற்றப்பட்டு பத்து நாள் திருவிழா நடக்கும்.