சபரிமலை வரும் பெருவழி பக்தர்கள் விரைவில் செல்ல ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2016 11:12
சபரிமலை: கரிமலை வழி சபரிமலை வரும் பக்தர்களுக்கு, மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் செல்ல சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்படும், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். எருமேலியில் இருந்து அழுதை, கரிமலை வழியாக பம்பை வரும் பெருவழி பாதை செங்குத்தான ஏற்றங்கள் நிறைந்தது. ஒரு காலத்தில் மகரவிளக்கு காலத்தில் மட்டும் இந்த பாதையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது மண்டலசீசன் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் இவ்வழியாக வருகின்றனர். தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்த பாதைகளில் பக்தர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்தார். இதில் வனப்பகுதி தொடங்கும் இடத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் பார்லரை காட்டின் உட்பகுதியில் செங்குத்தான ஏற்றத்தில் மாற்றி அமைக்க உத்தரவிட்டார். கரிமலையில் ஆக்சிஜன் பார்லர் அமைக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.கரிமலையில் குடிநீருக்கான ஊற்று மழையின்றி வற்றி விட்டது. இதனால் கரிமலையின் கீழ் பகுதியில் உள்ள ஊற்றில் இருந்து தண்ணீரை டேங்கில் சேமித்து, பம்பிங் செய்து கரிமலைக்கு கொண்டுவர உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கரிமலை ஏற்றம் மிகவும் கடினமானது. இதுவழியாக வரும் பக்தர்கள் மீண்டும் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக வந்து சன்னிதானம் வர நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் கரிமலை வழியாக வருபவர்களுக்கு அங்கு பாஸ் வழங்கி, மரக்கூட்டத்தில் இருந்து ஆன்லைன் வரிசை அல்லது அதற்கு இணையாக ஒரு வரிசை ஏற்படுத்தி சன்னிதானத்திற்கு விரைவாக வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.