ஹரிவராசனம் பாடலில் பிழையா? தந்திரி ராஜீவரரு விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2016 12:12
சபரிமலை: ஹரிவராசனம் பாடலில் உள்ள பிழையை கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் திருத்தி பாடினால், அதை சன்னிதானத்தில் பாட செய்வோம், என சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு தெரிவித்தார். சபரிமலையில் இரவு நடை அடைக்கும் போது ஐயப்பனின் தாலாட்டு பாடலாக ஹரிவராசனம் பாடல் பாடப்படுகிறது. இந்த பாடலை கர்நாடக இசை கலைஞரும், பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் பாடியுள்ளார். இந்நிலையில் தான் பாடிய இந்த பாடலில் ஒரு பிழை உள்ளதாக ஜேசுதாஸ் அண்மையில் ஒப்புக்கொண்டார். இதுபற்றி அப்போது அவர் கூறியதாவது: பாடலின் மூன்றாவது வரியில் அருவி மர்த்தனம் நித்ய நர்த்தனம் என்று உள்ளது. பாடலின் ஆசிரியர் தேவராஜன் சொல்லி தந்த படி பாடியதாகதான் எனக்கு நினைவு இருக்கிறது. ஆனால் இதை அரி (சத்ரு)- விமர்தனம் (நிக்ரகம்) என்று பிரித்து பாட வேண்டும். எனக்கு ஹரிவராசனம் பாட மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதை திருத்தி பாடுவேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜேசுதாஸ் சபரிமலை வந்த போது ஸ்ரீகோயில் முன்புறம் நின்று ஹரிவராசனம் பாடலை பாடினார். அப்போது அவர் அந்த தவறை திருத்தி பாடினார். இதுபற்றி தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ் திருத்தி பாடினால், அதை தான் சன்னிதானத்தில் பாடச் செய்வோம். சபரிமலையில் பெண் களுக்கு அனுமதி ஒட்டு மொத்தமாக மறுக்க வில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மட்டுமே தடை உள்ளது. இது தொடர்பான வழக்கு தொடுத்துள்ள சமூக சேவகி திருப்தி தேசாய் சபரிமலை வருவது அவரது தனிப்பட்ட விஷயம், என்றார்.