பதிவு செய்த நாள்
26
டிச
2016
10:12
சபரிமலை:சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடந்தது. இன்று மதியம், மண்டல பூஜை நடக்கிறது. சபரிமலை மண்டல பூஜைக்காக, 22-ம் தேதி ஆரன்முளாவில் புறப்பட்ட தங்க அங்கி, நேற்று மதியம், 2:00 மணிக்கு பம்பை வந்தது. கணபதி கோவில் முன்புறம், பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
வரவேற்பு : மதியம், 3:30 மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு, அய்யப்ப சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு சரங்குத்தி வந்த அங்கிக்கு, தேவசம் போர்டு சார்பில், வரவேற்பு கொடுக்கப்பட்டது.பின், 6:25 மணிக்கு, 18-ம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி வாங்கி, நடை அடைத்து, அங்கியை அய்யப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து, தீபாராதனை நடந்தது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அய்யப்பனை வணங்கினர்.
இன்று மண்டல பூஜை: இன்று மதியம், 12:15 மணிக்கு கும்ப ராசி முகூர்த்தத்தில், மண்டல பூஜை நடக்கிறது.கோவில் முன்புற மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்த பிரம்ம கலசத்தை, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி எடுத்து வர, ஊர்வலம் கோவிலை வலம் வரும். அய்யப்பனுக்கு கலச அபிஷேகம் செய்த பின், தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். மதியம், 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள், பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவர்.அதன்பின், மகரவிளக்கு கால பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. 31-ம் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து, நெய்யபிஷேகம் ஆரம்பிக்கும்.