கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள திருப்புணித்துறா கோயில் மூலவர் சந்தான கோபாலகிருஷ்ணன். இந்தச் சிலையை அர்ஜுனன் தன்னுடைய அம்பாறத்தூணியில் (பூணி) எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததால் திருப்பூணித்துறை எனப் பெயர் பெற்று, பிறகு மருவி திருப்பணித்துறா என வழங்கலாயிற்று. மூலவர் நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறார். கருவறையின் தென்புறம் கணபதி சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் இணைந்த சக்தியாக மூலவர் இருக்கிறார். கணபதியைத் தவிர பிற தெய்வங்கள் இல்லை. மூன்றடுக்குக் கொண்ட தூங்கா விளக்கு இங்கு எரிந்துகொண்டே இருக்கும். இத்தலத்திற்கு பூர்ண ஸ்ருதிபுரம் என்ற பெயரும் உண்டு.