பதிவு செய்த நாள்
11
ஜன
2017
03:01
தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன், புதன் ஆகியோரால் வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். சுக்கிரன் ஜன.27 வரை 7ம் இடத்தில் இருப்பதாலும், புதன் ஜன. 30 வரை 5ம் இடத்தில் இருப்பதாலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குருபகவான் ஜன.16ல் ராசிக்கு 3ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் முயற்சியில் தடை குறுக்கிடலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. சூரியனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு உயரும். ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழியில் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். மாத முற்பகுதியில் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் ஜன.8ல் சாதகமான இடத்துக்கு வருவதால் பிரச்னை மறைந்து ஒற்றுமை பலப்படும். தம்பதியிடையே இணக்கம் உண்டாகும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடிசிறப்பாக நடந்தேறும். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலைத்திருக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். ஜன.15,16, பிப்.11,12ல் ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். ஜன.22,23,24ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடுஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் பிப்.7,8ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். உடல்நலனை பொறுத்தவரை பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. செவ்வாயால் ஜன.16க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதை வரலாம். பிப்.3,4ல் வயிறு தொடர்பான பிரச்னையைச் சந்திக்கலாம். வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் வெளியூர் பயணம் அதிகரிக்கும். பெண்கள் வகையில் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு. அவர்களிடம் நெருக்கத்தை தவிர்க்கவும். ஜன.30க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் உண்டாகும். பங்குதாரர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். ஜன.14,17,18,19 பிப்.9,10ல் முயற்சியில் தடை வரலாம். ஜன.27,28,29ல் எதிர்பாராமல் வருமானம் வரும். செவ்வாயால் குறுக்கிட்ட அவப்பெயர், மறைமுகப் போட்டி முதலியன ஜன.16க்கு பிறகு மறையும். இளைய சகோதரர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஜன.30க்கு பிறகு ஒன்று சேருவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். பிப்.5,6ல் அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கப் பெறலாம். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.
கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பெண்களால் ஏற்பட்ட சிரமம் அடியோடு விலகும். அதற்கு சுக்கிரன் ஜன.27ல் இடம் மாறுவதே காரணம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் போட்டியாளர்களால் பிரச்னைக்கு ஆளாக நேரிடலாம். தொண்டர் நலனுக்காகப் பணம் செலவாகும். தலைமையின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது.
மாணவர்கள் இந்த மாதம் பிற்பகுதியில் புதனால் நன்மை காண்பர். அதிக மதிப்பெண் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி மகிழ்வர். பெற்றோர் மகிழும் விதத்தில் நன்றாகப் படிப்பர்.
விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் வரும்.
பெண்கள் குடும்பத்தில் சிறப்பிடம் வகிப்பர். ஜன. 20, 21 ல் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஜன. 30,31 ல் விருந்து, விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
நல்ல நாள்: ஜன.15,16,20,21,27,28,29,30, 31, பிப்.5,6,7,8,10,11,12
கவன நாள்: பிப்.1,2 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: பச்சை, சிவப்பு
பரிகாரம்: ஞானிகள், சன்னியாசிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். குருபகவானும் சாதகம் இல்லாமல் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்வது அவசியம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள்.