சில சமயங்களில், நாம் கடவுளை ஜெபித்தவுடன் கோரிக்கைகள் நிறைவேறி விடும். அந்த மகிழ்ச்சியில், கடவுளுக்கு நன்றி சொல்லக்கூட மறந்து விடுவோம். மேலும், கடவுள் நமக்கு கொடுத்த பலனின் ஒருசிறுபகுதியைக் கூட மற்றவர்களுக்கு தராமல் இருந்திருப்போம். இவையெல்லாம் பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. மேலும், பலன்கள் வரிசையாக கிடைத்த மகிழ்ச்சியை பார்ட்டிகள் நடத்தி கொண்டாடுவோம். பாவங்களை வரிசையாக செய்வோம். இப்படியே, மேலும் மேலும் கோரிக்கைகளை கடவுளிடம் வைக்க வைக்க, அவர் நிறைவேற்றி கொண்டே இருப்பார். ஒருமுறை, மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைக்கிறோம்.
கடவுளே! என் குழந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை. டாக்டர் பாதிக்கப்பட்ட அவனது உறுப்பை வெட்ட வேண்டும் என்கிறார். ஊனமுற்றவனாக அவன் நடக்கும் போது, பார்க்க என் உள்ளம் சகிக்காது. கர்த்தாவே ஆசிர்வதியும்” என கேட்போம். ஆனால், நம் ஜெபத்திற்கு பலனிருக்காது. டாக்டர் அந்த சிறுவனின் உறுப்பை வெட்டி எடுத்திருப்பார். அதைப் பார்த்து பார்த்து மனம் புழுங்கும். “ஆண்டவரே! என்னை இப்படி சோதித்து விட்டீரே” என புலம்புவோம். ஏன் ஆண்டவர் இப்படி செய்தார் என நினைத்துப் பார்க்க வேண்டும். “நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் திரிய வேண்டும்?” என்று சொல்லுகிறேன்” என்ற வசனம் வருகிறது. இதுபோலவே நாமும் புலம்புவோம். இதுபோன்ற சமயங்களில், நாம் கடவுளால் அடைந்த நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். அவற்றை நாம் மட்டுமே தனியாக அனுபவித்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த நன்மைகளை அடைவதற்காக நாம் செய்த பாவங்களின் பட்டியலைக் கணக்கிட வேண்டும். அதை தேவனிடம் அறிக்கையிட்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் அதுபோன்ற பாவம் செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும். இப்படி செய்தால், கர்த்தர் கருணை பொழிவார். நம் வாழ்வு மீண்டும் வசந்தமாகும்.