பதிவு செய்த நாள்
16
ஜன
2017
04:01
இஸ்லாமிய மார்க்கம் பல உயிர்களைப் பலி கொடுத்து வளர்ந்ததாகும். குறிப்பாக, நபிகள் நாயகத்தின் தோழர்கள் பலர், மார்க்கத்திற்காக பல சந்தர்ப்பங்களிலும் உயிர் துறந்துள்ளனர். இவர்களில், ஹபீப் பின் ஜைது அவர்களின் வரலாறு உணர்ச்சி ததும்பக்கூடியது. ஹபீப் பின் ஜைது அவர்கள் அரேபியாவில் வசித்த ஜைதிப்னு ஆஸிம், நுஸைபா பின்த் கஃபு ஆகியோரின் மகன் ஆவார். இவரும், இவரது பெற்றோரும் இஸ்லாத்தை ஏற்றனர். அந்நாளில், அரேபியாவின் தென்மாநிலமான யமாமாவில் முஸைலமா என்பவன் வசித்தான். பெரும் கொடுமைக்காரனான அவன், உலகத்தின் பல பகுதிகளைப் பிடிக்க ஆசைப்பட்டான். தன்னை மிகப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளும் வகையில் தானும், ஒரு நபியே என பிரகடனம் செய்தான். இதுகுறித்து, நபிகள் நாயகத்துக்கு ஒரு கடிதம் எழுதினான். இதைப் படித்த நாயகம், அந்தக் கடிதத்தைக் கொண்டு சென்ற துõதரிடம் அதை மறுத்து சூடான வார்த்தைகளுடன் பதில் கடிதம் அனுப்பி வைத்தார். அதைப்படித்த, முஸைலமா கடும் ஆத்திரமடைந்தான். நபிகளாரை பின்பற்றுவோரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். இதுபற்றி அறிந்த அண்ணலார், இனியும் அவனை விட்டு வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், கடைசி எச்சரிக்கை கடிதம் ஒன்றை, தன் தோழர், ஹபீப் பின் ஜைது அவர்களிடம் கொடுத்தனுப்பினார்.
இந்த கடிதத்தை மட்டும் படித்து, முஸைலமா திருந்தி விட்டால், அல்லாஹ் தனக்கு எத்தகைய பாக்கியங்களைக் கொடுப்பார் என்ற எண்ணத்துடனும், நபிகள் நாயகம் தந்த வேலையை முடிக்க செல்கிறோம் என்ற மகிழ்ச்சியுடனும் ஜைது அங்கு சென்றார். ஆனால், அவரது உயிர் பறிக்கப்படும்
என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. பொதுவாக துõதர்கள் எதிரிகளிடம் இருந்து வந்தாலும், அவர்களுக்குரிய மரியாதை அரேபியாவில் தரப்படும். ஆனால், கொடுமைக்காரனான முஸைலமாவிற்கு அந்தப் பண்பு இல்லை. அவன், ஹபீப் பின் ஜைது கொண்டு வந்த கடிதத்தைப் படித்து ஆத்திரமடைந்தான். அவரை அடைத்து வைத்து சித்ரவதை செய்தான். தன்னையே நபியாக ஏற்க வேண்டும் என்றும், இஸ்லாத்தை கைவிட வேண்டும் என்றும் வற்புறுத்தினான். ஆனால், ஜைது கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியாக, அவன் ஜைதுவிடம், “உம்மை பொதுஇடத்தில் மக்கள் முன்பு நிறுத்துவேன். அங்கே நாயகம் முகம்மதுவை பின்பற்றுவதை கைவிடுவதாக நீர் அறிவிக்க வேண்டும்.
இஸ்லாத்தை கைவிட்டு, என்னை நபியாக ஏற்றுக் கொள்வதாக சத்தமாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உமது உயிர் அந்த இடத்திலேயே பறிக்கப்படும்,” என்றான். உயிருக்குப் பயந்து ஜைது இதை ஒப்புக்கொள்வார் என்றே முஸைலமா நம்பினான். ஜைது அதைக் கண்டு கொள்ளவே இல்லை. பொது இடத்திற்கு கட்டி இழுத்து வரப்பட்ட ஜைது மக்கள் முன்னால் நிறுத்தப்பட்டார். முஸைலமா தன்னை நபியாக ஏற்கும்படி வற்புறுத்தினான். கடைசி வரை ஜைது சம்மதிக்கவில்லை. எனவே, அவரது உறுப்புகள் வெட்டப் பட்டன. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இத்தகவல் நாயகத்தை எட்டியது. அல்லாஹ் நிச்சயமாக முஸைலமாவுக்கு தண்டனை கொடுப்பார் என்று அத்துடன் விட்டு விட்டார். நாயகத்தின் காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றார். அவரது படைகள் முஸைலமாவைக் கொன்றது. ஜைது போன்றவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று, இறைவனின் கட்டளைகளை நிலைநிறுத்த தங்கள் உயிரையே காணிக்கையாக்கினர்.