பதிவு செய்த நாள்
17
ஜன
2017
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், அருணாசலேஸ்வரர் மறு ஊடல் விழாவை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். சக்தியை வழிபடாமல், சிவனை மட்டும் நினைத்து தவமிருந்த பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க சுவாமி சென்றபோது, சுவாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்தல், சுவாமி தன் நகைகளை திருடர்களிடம் பறிகொடுத்து கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது, கிரிவலப்பாதை முழுவதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். இதை தொடர்ந்து, கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே மறு ஊடல் ஏற்பட்டு, சமாதானம் அடையும் நிகழ்ச்சி நடந்தது. சிவனும், சக்தியும் சரிபாதி என்பதை உணர்ந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, சுவாமியையும், அம்மனையும் வழிபட துவங்கினார். கோவிலில் இந்த மறுஊடல் நிகழ்ச்சியை, காணும் தம்பதியருக்கு, இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ஏற்படாது என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த நிகழ்ச்சியை கண்டு வழிபட்டனர்.