பதிவு செய்த நாள்
17
ஜன
2017
11:01
திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வீதிகள் தோறும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, பொங்கல் நாளில் (முதல் நாள்) மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் (இரண்டாம் நாள்) மேல் திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று (மூன்றாம் நாள்) காலை 6:00 மணிக்கு, படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு திருத்தணி பெரிய தெரு சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து (இழுத்து) சென்றனர். மாலை, 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கிற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார். உற்சவர் முருகர் வீதியுலா வருவதை முன்னிட்டு நகர் முழுவதும் பெண்கள் தெருக்களில் வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர்.