பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழ சூறை விழா நடந்தது. பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் சோலைமலை அழகர்மலை பெருமாள் கோயிலில் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக தை 3ம் தேதி வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கில் வாழைப்பழங்கள் சூறை விடப்படுகின்றன. விவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் அறுவடை நாள் திருவிழாவான பொங்கலில் சூரியனுக்கும், இயற்கைக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. உழவுத் தொழிலின் நண்பனான கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் வைக்கப்படுகிறது. இயற்கை நமக்கு செய்த கொடைக்காக நன்றி செலுத்தும் விழாவாகவும், தொடர்ந்து விவசாயம் செழிக்கவும் சேவுகம் பட்டியில் வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. இவ்விழாவிற்காக வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்களும் இவ்வூருக்கு செல்கின்றனர். மேள, தாளத்துடன் ஒவ்வொரு வீடாகச் சென்று வாழைப்பழ கூடைகள் கிராம பூஜாரி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பூஜை செய்யப்பட்ட பழக்கூடைகள் சோலைமலை அழகர்பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன.