பதிவு செய்த நாள்
17
ஜன
2017
12:01
கொளத்தூர்: கொளத்துார், கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த பொங்கல் விழா, பார் வேட்டை உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 800 ஆண்டு கள் பழமை வாய்ந்த, கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ரங்கநாத பெருமாள், நின்றகோலத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலிக்கிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அது போல், இந்த ஆண்டிற்கான விழா, 13ம் தேதி, ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் துவங்கியது. பின், பொங்கலன்று ரங்கநாதர் உற்சவம் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்வான பார் வேட்டை உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய ரங்கநாத பெருமாள், கண்ணாபுரம் கிராமத்திற்கு வீதியுலா சென்றார். அங்கு, வாண வேடிக்கைகளுடன் ரங்கநாதரை வரவேற்ற கிராம மக்கள், சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.