பதிவு செய்த நாள்
17
ஜன
2017
12:01
ஸ்ரீபெரும்புதுார்: தமிழகம் முழுவதும், ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழாவை பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுாரில், அவரை சிறப்பிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட மணி மண்டபம் கட்டும் பணிகள் இது வரை துவங்கப்பட வில்லை. ஆயிரமாவது ஆண்டு விழா நெருக்கும் நிலையில், அதற்குள் மணி மண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஊர். சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர், இவர். இவரின் மனித நேய பண்புகள், கொள்கை, கோட்பாடுகளை அனைத்து தரப்பினரும் போற்றி பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் கோவில், ஸ்ரீராமானுஜர் திருஅவதாரம் செய்து, வழிபட்ட தலம்.இந்த கோவிலில் ராமா னுஜரின் உருவம் தாங்கிய செப்பு விக்ரகம் ஒன்றை, அவரது சீடர்கள் உருவாக்கினர். அது, தானுகந்த திருமேனி என, அழைக்கப்படுகிறது. அந்த திருமேனி, பல நுாறு ஆண்டுகளாக இந்த கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
அவதார திருநட்சத்திர விழா: ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு அவதார திருநட்சத்திர விழா, ஏப்ரல், 22ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை, வெகு விமரிசையாக இந்த கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்திய முழுவதும் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வர் என்பதால், அதற்கான ஏற்பாடுகள், அரசு சார்பில் செய்யப்படுகின்றன.ராமானுஜரின் ஆயிர மாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொற்பொழிவு, கருத்தரங்கு, கண்காட்சிகள், நாட்காட்டி, புத்தகம் வெளியீட்டு விழா என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழக சுற்றுலா துறை: அந்த வகையில், ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுாரில், தமிழக அரசின் சார்பில், மணி மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியானது. தமிழக சுற்றுலா துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜருக்கு, 6 கோடி ரூபாய் மதிப்பில் மணி மண்டபம் கட்டி, அதில், ஸ்ரீராமானுஜர் குறித்த வரலாற்று தகவல், நுாலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்து அறநிலைய துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2.70 ஏக்கர் நிலமும், இதற்காக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா இந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளும் இதுவரை துவங்கவில்லை. இதனால், ஸ்ரீராமானுஜரை சிறப்பிக்கும் வரையில், ஸ்ரீபெரும்புதுாரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இதனால், பக்தர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.