பட்டிவீரன்பட்டி: முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை அரிவாள் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் கருப்பணசாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி நடக்கிறது. நேற்று அதிகாலையில் பக்தர்களால் நுாற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. மாலையில் பூஜாரிகள் கூலுசாமி, ராமசாமி, பாலு ஆகியோர் நேர்த்திக் கடன் செலுத்தும் அரிவாள்களுக்கு பூஜை நடத்தினர். இரவு 11 மணியளவில் அரிவாள்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருப்பணசாமிக்கு செலுத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது வெளியூர் பக்தர்கள் சாமியாடி வருபவர்களிடம் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமாறு கால்களில் விழுந்து வரம் கேட்பது முக்கிய நிகழ்வாகும்.
கோயிலின் சிறப்பு: 17ம் நுாற்றாண்டில் கூலப்பநாயக்கன் ஜமீன் காலத்தில் உருவான கோயில் இது. இப்பகுதி விவசாயிகள் விளைச்சலுக்கான வரியை, நிலக்கோட்டை ஜமீனுக்கு செலுத்தி வந்தனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுவதால், சாமியின் ஆயுதமான அரிவாள் காணிக்கை செலுத்துவது வழக்கமானது. மேலும், கருப்பணசாமிக்கு நினைத்த காரியம் நிறைவேறியதும் 3 அடி முதல் 15 அடி உயரம் வரை அரிவாள்கள் காணிக்கையாக செலுத்துவது கோயிலின் சிறப்பு. அரிவாள்களை பெரியதம்பி, முருகன், தங்கவேல், சண்முகம் ஆகிய குடும்பத்தினர் ஒரு மாதம் விரமிருந்து செய்து வழங்கினர்.