பதிவு செய்த நாள்
17
ஜன
2017
12:01
திருத்தணி: திருத்தணி பகுதிகளில் உள்ள சிவன் கோவில்,களில் நடந்த மலைச்சுற்று விழாவில், கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் அமைந்து உள்ளது சிவசக்தி சித்தேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. நேற்று, மலைச்சுற்று விழாவையொட்டி, மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை, கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, மாலை, 7:00 மணி முதல், அதிகாலை, 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதே போல், திருத்தணி முருகன் துணை கோவிலான சப்த கன்னியம்மன் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து மூலவர் அம்மனை வழிபட்டும், சிலர் பொங்கல் வைத்து அங்கேயே மதிய உணவுஉண்டு கொண்டாடினர். இதேபோல், அதன் அருகே உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட, பல கோவில்களில், சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.