பதிவு செய்த நாள்
19
ஜன
2017
11:01
சென்னை: வைணவத்தை மக்களுக்கு போதித்த, ராமானுஜரின், 1,000வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தொடர் விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட், ராமானுஜ தரிசனம் எனும் பெயரில், மாபெரும் ரத யாத்திரையை, நேற்று சென்னையில் துவக்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இருந்து, நேற்று மாலை, 7:30 மணிக்கு துவங்கிய ரத யாத்திரையை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான, இ.எஸ்.எல்.நரசிம்மன் துவக்கி வைத்தார். பா.ஜ., - எம்.பி., இல.கணேசன், ஸ்ரீபெரும்புதுார் எம்பார் ஜீயர் மற்றும் பல ஜீயர்கள் கலந்து கொண்டனர். விழாவில், ராமானுஜர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறையை, சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர், ராதிகா சக்கரவர்த்தி வெளியிட்டார். லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்டின் துணைத் தலைவர் ராதா விஜயசாரதி பேசியதாவது: இந்த ரதம், இன்னும் நான்கு நாட்களுக்கு சென்னையில் இருக்கும்; பின், தென் மாவட்டங்களுக்குச் செல்லும். பின், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பயணித்து, ஏப்ரல் 22ல் சென்னை திரும்பும்.
ஏப்ரல் 26 முதல், மே 5 வரை, சென்னை தீவுத் திடலில், அற்புத ராமானுஜர் என்னும் தலைப்பில் ராமானுஜர் வாழ்வில் நடந்த முக்கியமான, 50 நிகழ்வுகளைச் சொல்லும் ஆன்மிக கண்காட்சி நடக்கிறது. பிப்., 4, 5ம் தேதிகளில், பஜ ராமானுஜம் எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான, ராமானுஜர் ஸ்லோகம் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறுகிறது. இவை தவிர, மே 7ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபத்தில், ஜகதாச்சாரியன் பகவத் ராமானுஜர் எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கும், பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விழா தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 95668 74070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.