பதிவு செய்த நாள்
20
ஜன
2017
10:01
இரும்பாலை: கால்நடைகள், துன்புறுத்தப்படுவதாக கூறி, ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தடை பெற்றுள்ள நிலையில், சேலம் அருகேயுள்ள கிராமத்தில், காளைகள் மற்றும் பசுக்களுக்கு சிலை வைத்து, தெய்வங்களாக வழிபடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
தமிழக கிராமங்களில், பொங்கல் விழாவையொட்டி நடக்கும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை பிடிக்கும், மாடுபிடி வீரர்களால், காளைகள் துன்புறுத்துப்படுகிறது என்ற குற்றச்சாட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உண்மையில், காளைகளை துன்புறுத்துவது கிடையாது; காளைகளை பிடிக்க முயலும் மாடுபிடி வீரர்களுக்கு வேண்டுமானால் காயங்கள் ஏற்படும். தங்கள் வீட்டு குழந்தையை போல்தான், காளைகளை பாதுகாத்து வளர்த்து வருவதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் தெரிவித்தனர். குடும்பத்துக்காக உழைத்த, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்றளவும் கிராமங்களில் காளைமாடுகளை வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம், இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தில், வயல்வெளிகளுக்கு நடுவே, 50க்கும் மேற்பட்ட காளைமாடு மற்றும் பசுமாடு சிலைகள் வைத்து, இப்பகுதி விவசாயிகள் தெய்வங்களாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக பசு, மாடுகளுக்கு இப்பகுதி மக்கள் சிலை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.