சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது. சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. 16 முதல் 19 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 18ம் தேதி காலை 10 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று தொடர்ந்து மதியம் களபபூஜை நடைபெற்றது. நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெற்றது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர்.இன்று காலை 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.