பதிவு செய்த நாள்
20
ஜன
2017
11:01
சென்னை: தமிழகத்தில், சங்க காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததற்கான சான்று, கொற்கை பாண்டியரின் நாணயத்தில் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் முன்பு வெளியான, மாறன் நாணயம் குறித்த கட்டுரை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நாணயத்தின் முன்புறத்தில், எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நிற்கிறது. மாட்டின் கொம்பிற்கு அருகில், முழுமையாக அச்சாகாத, மவுரிய பிராமி வகையைச் சேர்ந்த, மா என்ற எழுத்தும், எருதின் மேல்புறம், தமிழ் - பிராமி வகையைச் சேர்ந்த, ற என்ற எழுத்தும், இடமிருந்து வலப்பக்கம், படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இது, இடப்பற்றாக்குறையால், படுத்த நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. கடைசி எழுத்தான, ன் - தமிழ் - பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால், மாறன் என்ற பெயர் வரும். நாணயத்தின் பின்புறத்தை, மிக நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன், எருதை அடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே, ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்ததை அறிய முடிகிறது. கி.மு., மூன்றாம் நுாற்றாண்டை சேர்ந்த கொற்கை பாண்டியரான மாறன் நாணயத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை, வெறும் காட்சி அல்ல; அது, நம் பண்பாட்டின் ஆணி வேருக்கான சாட்சி!