பதிவு செய்த நாள்
20
ஜன
2017
12:01
திருத்தணி : திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் புதிதாக சுவாமி சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில் கற்பகாம்பாள் சமேத திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நடந்தும், கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், துர்க்கையம்மன், பைரவர், அய்யப்பன் மற்றும் நவக்கிரகங்கள் என, தனித்தனி சன்னிதிகள் உருவாக்கப்பட்டன. சன்னிதிகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கலச பூஜை: இதையடுத்து, புதிய சிலைகள் மற்றும் கோவில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலைகள், 101 கலசங்கள் வைத்து நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானம் மற்றும் புதிய சிலைகளுக்கும் கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்: தொடர்ந்து, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில், திருத்தணி, அகூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.