பதிவு செய்த நாள்
20
ஜன
2017
04:01
ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு இடைவிடாது தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர்கள் மூவர். அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் - இவர்களுள் கருடன், திருமாலுக்கு ஏழுவிதமான தொண்டுகளைச் செய்கிறார். தாசன், சிநேகிதன், வாகனம், ஆசனம், கொடி, மேல்கட்டி மற்றும் விசிறியாகத் திகழ்கிறார். கருடன் வேதத்தால் புகழப்பட்டவர். வேத ஸ்வரூபி. மந்திரங்களில் காருடமந்திரமும், யந்திரங்களில் சுதர்சன யந்திரமும் மிகவும் புகழ்பெற்றவை. கருட பஞ்சாக்ஷரி இம்மை, மறுமைப் பலன்களை தரவல்லது. கருட பகவானை ஜபித்தால் வானத்தில் தாண்டுவது, ஜலம், நெருப்பு, வாயு இவற்றில் பயமின்றி நுழைவது உள்ளிட்ட எல்லா சித்திகளையும் பெறலாம். அனுமன் கடலைத் தாண்ட உதவியது கருட மந்திரமே!
கருடன் ஓர் மங்கள தேவதை: பல கோயில்களில் கருடசேவை விசேஷம். நித்யசூரிகளில் கருட பகவானே நடுவர். கருடனின் இடது கைகளில் - ஆதிசேஷன் வளையல்களாகவும், வாசுகி- பூணூலாகவும், கார்க்கோடகன் - அரைஞாண் கயிறாகவும், பத்மன் - வலது காதணியாகவும், மகாபத்மன் - இடது காதணியாகவும், சங்கபாலன்- திருமுடியாகவும் இருக்க, வலது தோள்பட்டையில் -குளிகன் விளங்க. இவ்விதம் சப்த நாகர்களைத் தமது திருமேனியில் தரித்தவராக கருடன் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் இவர் சூரிய மண்டலத்தில் சஞ்சரிப்பவர். ஞானிகளின் உள்ளங்களில் விளங்குபவர். திருமாலைப் போலவே அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அளித்து பாமர மக்களைக் காப்பவர். திருக்கோயில்களில் திருமாலின் சன்னதிக்கு நேர் எதிர் சன்னதியில் எல்லா கைங்கர்யங்களையும் பகவானுக்குச் செய்யத் தயாரான நிலையில் இவர் இருப்பார். கோயில்களில் பகவானை சேவிப்பதற்கு முன் இவரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பது வைணவ மரபு.
கருட பகவானின் பலவித வடிவங்கள் உள்ள கோயில்கள்: சதுரங்கப்பட்டினம் மலை மண்டலப் பெருமாள் கோயிலில் தன் உடம்பில் எட்டு நாகங்களைக் கொண்டவராய் அஷ்ட நாக கருடன் என்ற பெயருடன் விளங்குகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கூப்பிய கரங்களுடன் காட்சி தரும் கருடனை தரிசிக்கலாம். இதே ஆச்சர்யமான சேவையினை நவதிருப்பதிகளுள் ஒன்றான (பெருங்குளம்) திருக்குளந்தை மாயக் கூத்தன் கோயிலிலும் தரிசிக்கலாம். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருக்கண்ணங்குடியில் கைகளைக் கட்டியபடி, நின்ற நிலையில் (வைகுண்டத்தில் இருப்பது போல்) காட்சி தருகிறார், கருடன்.
சோழ நாட்டு திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் சங்கு சக்கரம் ஏந்தியவாறு அமர்ந்த நிலையில் திருமாலின் அம்சமாகக் காட்சி தருகிறார் கருடாழ்வார். ஸ்ரீரங்கத்தில் அரங்கன் சன்னதிக்கு எதிர்ப்புறம் பெரிய திருவடி என்ற பெயருக்கு ஏற்ப, பெரிய திருவுருவ கருடனையும், அமர்ந்த நிலையில் காட்சி தரும் சதுர்புஜ அமிர்த கலச கருடனையும் தரிசிக்கலாம். பாண்டிய நாட்டு திவ்ய தேசமான திருத்தங்கலில் கையில் அமிர்த கலசம், சர்ப்பத்துடன் சதுர்புஜ கருடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். திருசிறுபுலியூரில் கருட பகவான் பள்ளத்தில் காட்சி தருகிறார். இங்குதான் கருடனுக்கும் நாகங்களுக்கும் இருந்த பகை நீங்கியதாம். ஆதிசேஷனை திருமால் தன் அரவணையாக ஏற்றுக் கொண்ட தலம் இது.
காவேரிப்பாக்கத்தில் ராமர் கோயிலில் காருண்யம் கொண்ட கருடன் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறார். சோளிங்கர் தக்கான் குளக்கரையில் உள்ள வரதராஜப் பெருமான் கோயிலில், மூலவருடன் கருடனும் காட்சி தருகிறார். இந்த ஊரைச் சேர்ந்த பரம பக்தர் தொட்டாச்சார்யாருக்காக காஞ்சி வரதராஜப் பெருமாள் இங்கே கருட சேவையில் காட்சி தந்தது வரலாற்று சிறப்புமிக்கது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவர் கஜேந்திர வரதன், கருடாரூடராய்க் காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுயகரத்தில், உத்ஸவ கருட சேவை மூர்த்தி விக்ரகம் இருப்பது விசேஷம். நாச்சியார் கோயிலில் கல் கருட சேவை மிகவும் விசேஷமானது. சன்னதியில் 4 பேரால் எழுந்தருளும் கருட வாகனம் 8,16,32 என படிப்படியாக அதிகமாகி ஊரை வலம் வந்து மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்பொழுது படிப்படியாக (32,16,8) என குறைந்து கடைசியில் 4 பேர் அழைத்துச் செல்லும் காட்சி அற்புதமானது. சென்னை சவுகார்பேட்டை பைராகிமடம் திருவேங்கட முடையான் கோயிலில் அருள்பாலிக்கும் அலர்மேல் மங்கை, கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த உத்ஸவத்தில் ஒரு நாள், பெண் கருட (கருடி) வாகனத்தில் காட்சி தருகிறார். பெண் கருட வாகனம் இங்கே தனிச்சிறப்பானது.
திருக்கண்ணமங்கையில் காட்சி தரும் கருடாழ்வார்க்கு புடவை சமர்ப்பிப்பார்கள். திருப்பதியின் ஏழுமலைகளுள் ஒன்றின் பெயர் கருடாத்ரி மலை என கருடனுக்கு பெருமையை சேர்க்கும் விதமாக அழைக்கப்படுகிறது. கருட பஞ்சாட்சரி மந்திரத்தை ஜபித்து கருட பகவானை வணங்கினால், சகல நன்மைகளையும் அடையலாம். அதோடு திருமாலின் திருவருளும் பூரணமாகக் கிடைக்கும்.