பதிவு செய்த நாள்
21
ஜன
2017
10:01
கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னை என்ற நீளாதேவியை மணந்தார் என்பது, நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.கிருஷ்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் சகோதரர் கும்பனின் மகள், நப்பின்னையாக அவதரித்தார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவரும், மகா விஷ்ணுவின் மனைவியர். வராக அவதாரத்தில் பூதேவியும், ராமாவதாரத்தில் ஸ்ரீதேவியும், கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியும் அவதரித்தனர்.
தேனினுமினிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டிற்கு சான்றாக அமைந்து இருக்கும் பாசுரம் இது தான்: தோளிசேர் பின்னை பொருட்டு எருதேழ் தழீஇக்கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளினை மேலணி தண்ணனந் துழாயென்றே நாளுநாள் நைகின்றதால் என்தன் மாதரே!இப்பாடலில், எருதேழ் தழீஇக் கோளியர் என்ற தொடர், ஏழு எருதுகளை வீரமாக அடக்கியவர் என்பது, கிருஷ்ணரை குறிப்பிடுகிறது. துவாபர யுகத்திலேயே, எருதுகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்துவது வழக்கத்திலிருந்தது என்பது, இதிலிருந்து தெரிய வருகிறது.
நம்மாழ்வார் : நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய, 12 ஆழ்வார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர், நம்மாழ்வார். பிறந்தது முதல், வாய் பேச முடியாமல் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரால் ஆட்கொள்ளப்பட்டு, பல பாசுரங்களை பாடினார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 1,352 பாசுரங்கள், நம்மாழ்வாரால் இயற்றப்பட்டவை. ஸ்ரீரங்கத்தில் அரவையர் சேவை, நம்மாழ்வாரை சிறப்பித்து செய்யப்படுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தம் : மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை எடுத்துரைக்கும், 4,000 தமிழ் பாசுரங்களைக் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், 12 ஆழ்வார்களால் பாடப்பட்டு, நாதமுனி என்பவரால், 9-ம் நுாற்றாண்டில் தொகுக்கப்பட்டது. வி.வி.சுப்ரமணியம்மேலாண் இயக்குனர், ஏ.எம்.ஏ., வேதிக் சர்வீசஸ் (பி) லிட்.