பதிவு செய்த நாள்
21
ஜன
2017
12:01
பந்தலுார்: பந்தலுார் அருகே,கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, கடந்த, 17ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, சாமியார் மலையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி ஆசிரமத்தில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, பூஜை நடந்தது. பகல், 2:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மாலை, 6:30 மணிக்கு, முதல்கால வேள்வி ஆகியவை நடந்தது. 18ம்தேதி காலை,6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கல இசை, 9:00மணிக்கு திருமஞ்சனம், 10:00மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மதியம், 1:00மணிக்கு அன்னதானம், 6:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, 7:00மணிக்கு மருந்து சாற்றுதல், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
19ம்தேதி காலை, 7:00 மணிக்கு காப்பு அணிவித்தல், 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, மலர் வழிபாடு நடந்தது. காலை, 9:00மணிக்கு கோவை துறவியர்கள் மெய்கண்ட அடிகளார், அரங்கசாமி அடிகள், மரகதம் அம்மையார் தலைமையில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. மாலை 6:00மணிக்கு தீபாரதனை, வானவேடிக்கை, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிங்காரம், கமிட்டி தலைவர் தியாகராஜ், துணை தலைவர் கந்தசாமி, செயலாளர் கோவிந்தன்,பொருளாளர் அசோக், துணை செயலாளர் ராஜேந்திரன்,அர்ச்சகர் சக்திவேல் தலைமையில், கிராம மக்கள் செய்திருந்தனர்.