பதிவு செய்த நாள்
21
ஜன
2017
04:01
காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கம் என்னுமிடத்தில் தங்கியிருந்தார். அவரைக் காண வந்த முன்னாள் பிரதமர் இந்திரா ஒரு மணி நேரம், அவரைத் தரிசிக்க காத்திருந்தும் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனது. இந்நிலையில், அன்றிரவு கவிஞர் கண்ணதாசன் பெரியவரைத் தரிசிக்க வந்தார். இந்தத் தகவல் பெரியவர் தங்கியிருந்த குடிசையின் ஜன்னல் வழியாகத் தெரிவிக்கப்பட்டது. துõக்கத்தில் இருந்து விழித்த பெரியவர், ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து விட்டு, கண்ணதாசனை காண வரும்படி அழைத்தார். குடிசையின் வாசல் அருகே பாயை விரித்து பெரியவர் கீழே அமர்ந்தார். கண்ணதாசனும் அருகில் அமர்ந்தார். இருவரும் பல விஷயங்கள் குறித்து 45 நிமிடநேரம் உரையாடினர். குலசேகராழ்வார், கொங்குநாடு, மலையாள மொழி குறித்த பல விஷயங்கள் அவர்களின் உரையாடலில் இடம்பெற்றன. முடிவில் அங்கிருந்து கிளம்பிய கண்ணதாசன், “சுவாமி! எனக்கு நிறைந்த ஆரோக்கியம் வேணும்,” என்று பெரியவரிடம் வேண்டிக் கொண்டார்.
“நல்லா சேவை செய்றே... நல்லா இருப்பே! வர்றவா எல்லாம் உன்னைப் பத்தி நல்லவிதமா சொல்றா,” என்று பெரியவர் தன் அன்பைப் வெளிப்படுத்தி, அவரை ஆசிர்வதித்தார். இதன்பிறகு, கடவுளை நேரில் சந்தித்து உரையாடிய உணர்வு, தனக்கு ஏற்பட்டதாக கவிஞர் கண்ணதாசன் மகிழ்ந்தார். “சேவை.. சேவை... சேவை...இதைத் தவிர வேறெந்த தேவையும் அறியாத ஒரு மகாத்மாவின் முன்னால் நான் கை கட்டி மெய்மறந்து நின்றேன். இரவு நேரத்திலும் எனக்காக துõங்கிக் கொண்டிருந்த அவர் எழுந்து வந்ததும், என்னிடம் மனம் விட்டுப் பேசியதும், எனக்கு புது தெம்பையும், ஆரோக்கியத்தையும் அளித்தது. விஞ்ஞான வசதிகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணெண்ணெய் விளக்கும், கை விசிறியுமாக அவர் இருந்தார். சீடர்களைக் கூப்பிட்டுக் கைகால் பிடிக்கச் சொல்லும் பழக்கம் கூட அவருக்கு கிடையாது. காமம், குரோதம் என அனைத்தையும் துறந்தவர் அவர். பெரியவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பொதுச்சேவை. முடிந்தால் பத்து பேருக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் தெருவில் போகும் போது, கண்ணாடித் துண்டு கிடந்தால் கூட அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டால் கூட போதும். இது நம் கடமை என்று சேவையில் ஈடுபடுங்கள். ஊருக்குச் செய்ய முடியாவிட்டால் உங்களின் குடும்பத்திற்காவது செய்யுங்கள்.அதன் பெயரே சுயதர்மம்,” என்று தன் அனுபவத்தை கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டார்.