பதிவு செய்த நாள்
21
ஜன
2017
04:01
*இன்ப துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. எதையும் தாங்கும் இதயம் மனிதனுக்கு இருந்து விட்டால் ஆயுள் முழுவதும் அமைதியுடன் வாழ முடியும்.
*பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர், துறவியர், தர்ம சிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்த பூமிப்பந்து இடைவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
*நிலவால் இரவுப்பொழுது பிரகாசம் அடைகிறது. சூரியனால் பகல்பொழுது ஒளி பெறுகிறது. நல்ல பிள்ளையால் அவன் பிறந்த குடும்பம் விளங்குகிறது. செய்த தர்மத்தால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறுகிறது.
*நல்ல குணமுள்ள மனைவி, குழந்தை மழலை பேசும் மகிழ்ச்சி, அரசவையில் கிடைக்கும் மதிப்பு, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை தேவாமிர்தத்திற்கு ஈடான சிறப்பு கொண்டவை.
*பசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும் அளிக்கின்ற தானத்திற்கு இணையானது இல்லை.
*ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல், நுõறு முறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை
ஒருமுறை வணங்கினாலே கிடைத்து விடும்.
*பாம்புக்கு பால் வார்த்தாலும், அது விஷத்தையே கொடுக்கும். கீழ்த்தரமான மனிதர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களால் தீமையே உண்டாகும்.
*நல்லவர்களின் நட்பால் வாழ்வில் அமைதி உண்டாகும். வாக்கில் இனிமை சேரும். மக்கள் மத்தியில் கவுரவம் கூடும்.
*வாழ்நாள், பணம், இளமை இவை அனைத்தும் நிலையில்லாதவை. ஆனால் செய்த தர்மம், அதனால் கிடைத்த புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
*கணவரின் கருத்தறிந்து நடக்கும் மனைவி, பெற்றோரை நேசிக்கும் பிள்ளை,
சுகதுக்கத்தில் சேர்ந்திருக்கும் நண்பன் இந்த மூவரும் மேன்மையானவர்கள்.
*தீப்பந்தம் கீழ் நோக்கிப் பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கியே எரியும். அதுபோல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வநிலையில் தாழ்ந்திருந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர்.
*காய்கறி தோட்டமிடுபவன் செடி கொடிகளுக்கு சேதம் இல்லாமல் காய்கறிகளைப் பறிப்பது போல, மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரி வசூலிப்பதே நல்ல அரசின் அடையாளம்.
*உயிருக்கு ஆபத்து நேரும் போதும், தன்னிடம் உள்ள செல்வத்தை அபகரிக்கும் போதும் மனிதன் பொய் சொல்வது குற்றம் ஆகாது.
*தவம் செய்ய காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம். வீட்டில் இருந்து மனைவி, மக்களுடன் வாழ்ந்தாலே அது தலைசிறந்த தவம் தான்.
*பிறர் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை. மன்னித்ததோடு மறந்து விடுவது தெய்வத்தன்மை. இந்த இருதன்மையும் பக்தியால் பெற முடியும்.
*நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். ஆனால், பாமர மனிதர்களின் கோபம் பிறவி முழுவதும் தொடரும்.
*வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்தால் போதும். இளமைக்காலத்தை பயனுள்ளதாக்கும் வழியைக் கற்றுக் கொள்ள முடியும்.
*மற்றவரை மேலேற்றும் ஏணி, தான் மேலே செல்லாது. ஆனால் உபதேசம் செய்பவன், தானும் அதைக் கடைபிடித்து உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்துபவனாக இருக்க வேண்டும். (மகான் வாரியார்)