திருப்பதி: திருமலை மேல், விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியாது, என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார். திருமலை ஏழுமலையானை, தன் குடும்பத்தினருடன் தரிசனம் செய்த, மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: திருமலை மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஏழுமலையான் கோவிலுக்கு நேர் மேலாக விமானங்கள் பறந்து செல்வதை வேண்டுமானால், தடுக்க முடியும். ஆனால், திருமலை மேல் விமானங்கள் பறப்பதை தடுக்க முடியாது. திருப்பதி விமான நிலையத்திலிருந்து, புறப்படும் விமானங்கள் அனைத்தும், திருமலை மேல் பறந்து செல்ல வேண்டியுள்ளது. பக்தர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.