மஞ்சூர்: நுந்தளா கிராமத்தில் ஹெத்தையம்மன் விழா கோலாகலமாக நடந்தது. கோத்தகிரி கிராமத்தில் ஹெத்தையம்மன் விழா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு துவங்கியதை அடுத்து, பேரகணி, ஒன்னதலை, ஜெகதளா உள்ளிட்ட கிராமங்களில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு நிறைவு பெற்றது. இதையடுத்து தொதநாடு, மேற்குநாடு, குந்தை, பொறங்காடு ‘சீமெ’களில் உள்ள அந்தந்த கிராமத்தில் ஹெத்தையம்மன் விழா நடந்து வருகிறது. நேற்று பிரசித்தி பெற்ற நுந்தளா கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் விழாவையொட்டி காலை, 7:00 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்த நடந்த நிகழ்ச்சியில் திரளான படுகரின மக்கள் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய உடையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, நான்கு சீமெயிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர், கிராம மக்கள் செய்திருந்தனர்.