1952 பிப்., 23 மகாசிவராத்திரியன்று மயிலாடுதுறை அருகிலுள்ள நாகங்குடி கிராமத்திற்கு காஞ்சிப்பெரியவர் வந்தார். அங்கு பக்தர்களிடம் சிவபெருமானின் மகிமை’ குறித்து அருளுரை வழங்கினார். அவரது பேச்சின் தொகுப்பு இதோ. உஷ்ணத்தால் உருகிய நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் நிறமுள்ளதாகி விடும். சாஸ்திரங்கள் சிவபெருமானை உருவமற்ற அரூபி என்று கூறுகின்றன. ஆனால், அவர் 62 வடிவங்களுடனும் காட்சியளிக்கிறார். ஆபரணம் எதுவும் அணியாமல் இயற்கை எழிலுடன் காட்சி தருவது பிட்சாடனர்’ என்னும் வடிவம். அழகே வடிவாக இருக்கும் போது சுந்தரேஸ்வரர்’ என்று பெயர் பெறுகிறார். இந்த வடிவம் வேண்டும் வரங்களைத் தரக்கூடியது. பக்தர்களின் பயத்தைப் போக்கி அபயம் அளிக்கும் பைரவராகவும், வீரபத்திரராகவும் அவர் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பும் ஆனந்தத்தை அளிக்கும் சபாபதியாக (நடராஜர்) நடனமாடிக் களிக்கிறார். ஞானத்தை வழங்கும் விதத்தில், கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தியாக அருள்புரிகிறார். உலகத்தை அழிக்க வேண்டும் என அவர் நினைத்து விட்டால், ஞானி, அஞ்ஞானி, பாவி, பாக்கியசாலி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரையும் ஒடுக்கி விடுவார். சுகம், துக்கம் இரண்டில் இருந்தும் விடுவித்து, உயிர்களுக்கு ஓய்வு தரவே இந்த விளையாடலை அவர் நிகழ்த்துவார். இதனால் தான் அவரை கருணைக்கடல் என்கிறோம். எல்லா உயிர்களுக்கும் அடைக்கலம் அளிக்கும் சிவனைக் கொண்டாடும் நாளே சிவராத்திரி. இந்நாளில் உருவத்திற்கும், அருவத்திற்கும் (உருவமற்ற நிலைக்கும்) இடைப்பட்ட அருவுருவம் என்னும் லிங்கத்திற்கு பூஜைகள் நடக்கும். ஆதியும், அந்தமும் இல்லாத சிவன், லிங்கோத்பவ மூர்த்தி என்னும் பெயரில், சிவராத்திரி நள்ளிரவில் விஸ்வரூபம் எடுப்பார். புனிதமான இந்நாள் வழிபாட்டிற்கும், தியானத்திற்கும் மிக உகந்தது. இந்நாளில் விரதமிருந்து சிவநாமத்தை பக்தியுடன் ஜெபிக்க வேண்டும். சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். (மகான் காஞ்சிப் பெரியவர்)