பதிவு செய்த நாள்
24
பிப்
2017
10:02
திருப்பூர் :சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா நடக்கிறது; இரவு முழுவதும், நான்கு ஜாம பூஜைகள் நடக்கிறது. அங்காளம்மன் கோவிலில், மயான பூஜை நடக்கிறது.பெருமான் ஆல கால விஷத்தை உண்ட போது, தேவர்கள் இரவு முழுவதும் சிவனை பூஜித்த ராத்திரியே, மகா சிவராத்திரியாகும். இன்று, மகா சிவராத்திரி என்பதால், எம்பெருமானுக்கு இன்றிரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும். இன்று நடக்கும் முதல் ஜாம பூஜையில், பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரை ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கிறது.இரண்டாம் ஜாம பூஜையில், சர்க்கரை, பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களாலும்; மூன்றாம் ஜாம பூஜையில், தேன் உள்ளிட்ட திரவியங்களிலும், மல்லிகை அலங்காரம், வில்வ இலை அர்ச்சனையும் நடக்கிறது. நான்காம் ஜாம பூஜையின் போது, கரும்பு சாறு உள்ளிட்ட திரவியங்கள் அபிஷேகம், விசேஷ அலங்காரம் என, இரவு முழுவதும் சிவராத்திரி பூஜை நடக்கிறது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், சுக்ரீஸ்வரர் கோவில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும், சிவராத்திரி விழா, நான்கு ஜாம பூஜைகளுடன் நடக்கிறது.
மயான பூஜை: முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்த அபிஷேகம் நடக்கிறது.தொடந்து, கங்கணம் கட்டுதல், நந்தீஸ்வரன் அழைப்பு, வெற்றிலை பாக்கு பிடித்தல் உள்ளிட்டவை நடக்கிறது. அம்மனுக்கு தங்க கவச அலங்காரமும், அதை தொடர்ந்து, நள்ளிரவு, 2:00 மணிக்கு, அம்மன் முகம் எடுத்து ஆடுதல், மயான பூஜை, வல்லாள கண்டனை சம்ஹாரம் செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, சக்தி விந்தை அழைப்பு எனும், அம்மனின் அலகு தரிசனம் நடைபெறவுள்ளது.