பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
ஊத்துக்கோட்டை : சிவராத்திரி விழாவயொட்டி, சிவாலயங்களில் நான்கு கால அபிஷேகங்கள், பிரதோஷ விழாவும் இன்று மாலை நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை வேளைகளில் வால்மிகீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும், சிறப்பு பூஜைகள், நான்கு கால யாக பூஜை, பரத நாட்டியம், கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இரவு உற்சவர் சிவபெருமான் மற்றும் சர்வமங்களா ஆகிய தெய்வங்கள் ஒவ்வொரு நாளும், பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று, மாலை, 4:30 மணிக்கு, பிரதோஷ விழாவும், மாலை, 6:00 மணிக்கு, முதல்கால யாக பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, 2வது யாக பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, 3வது கால யாக பூஜை, நாளை, அதிகாலை, 4:00 மணிக்கு 4வது கால யாக பூஜையும் நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், காரணீஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பூந்தோப்பு பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.