பதிவு செய்த நாள்
24
பிப்
2017
12:02
மதுரை : பரம்பிதா சிவ பரமாத்மா அதர்மம் நிறைந்த இக்கலியுகத்தை பொன்னுலகம் ஆக்குவதற்கு இப்புவியில் அவதாரம் செய்த தினமே மகா சிவராத்திரி தினமாகும். மதுரை பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக 82வது சிவஜெயந்தி (மகாசிவராத்திரி) விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காசி விஷ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் 22ம் தேதி, புதன் கிழமை வெகு சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது. திரு. பாஸ்கரன், திரு. திருநாவுக்கரசு, பிரம்மா குமாரி டாக்டர் சாந்தி ஆகியோர் தரிசனத்தின் அரங்கினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
மதுரை பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் பிரம்மா குமாரி டாக்டர். சாந்தி அவர்கள்-கடவுள் ஒருவர், ஒளி சொரூபம் ஆனவர் என்று சர்வ தர்ம ஸ்தாபகரர்களான இப்ராஹிம், இயேசு கிறிஸ்து, குருநானக் முதலானோர் கூறியிருக்கின்றனர். இந்து தர்மத்திலும் ஒளி சொரூபமாகிய இறைவனை லிங்க வடிவத்தில் பூஜிக்கின்றனர். எனவே அனைத்து தர்மத்தினருக்கும் தந்தையானவர் ஒளிபொருந்திய பரம்பொருள் பரமாத்மா சிவன் என்பதை தமது உரையில் எடுத்துரைத்தார்கள்.
தெய்வீக சகோதரி பிரம்மா குமாரி செண்பகம் அவர்கள்-சிவஜெயந்தியின் மகத்துவத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்கள். உண்மையாக கண்விழித்தல் என்பது மனதினால் இடைவிடாது பரமபிதா சிவ பரமாத்மாவை மனதால் நினைவு செய்வதாகும். நாம் நம்மை ஓர் ஆத்மா என்று புரிந்து பரமாத்மா தந்தை சிவனை உள்ளன்போடு நேசித்து தன்னிடம் ஆட்கொண்டுள்ள இறைவனிடம் பலி கொடுக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவே சிவராத்திரி அன்று ஆட்டை பலி கொடுக்கின்றார்கள். தீய எண்ணங்கள் என்ற உணவை மனதிற்குக் கொடுக்காமல் இருப்பதே உண்மையான <<உபவாசம் என்பதை எடுத்துரைத்தார்கள். பின்னர், விருந்தினர்கள் இராஜயோக தியான அரங்கில் 5 நிமிடம் தியானம் செய்தபின் சிவதரிசன ஒளி, ஒலி காட்சியைக் கண்டுகளித்தனர்.
காசி விஷ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் 23.2.2017, வியாழன் முதல் 25.2.2017, சனிக்கிழமை வரை, காலை 7.00 மணி முதல் 12.00 வரையிலும் மற்றும் மாலை 5.00 முதல் 8.00 மணி வரையிலும் நடைபெறும். ஏற்பாடு: பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் விஷ்வ சாந்தி பவன், மதுரை.