பதிவு செய்த நாள்
25
பிப்
2017
12:02
செக்கானுாரணி: மகா சிவராத்திரியை முன்னிட்டு செக்கானுாரணி, கருமாத்துார் பகுதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். செக்கானுாரணி பகுதியில் உள்ள ஆதிசிவன், கருப்பசாமி, காமாட்சியம்மன் கோயில்கள், கருமாத்துார் பகுதியில் உள்ள மத்தியஸ்து கருப்பசாமி, பொன்னாங்கன், நல்லகுரும்பய்யர், கோட்டைமந்தை கொத்தாள கருப்பசாமி, கலியுக காசிவிஸ்வநாதர், விருமாண்டி, பேச்சியம்மன், காக்குவீரன் கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்24, அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்த கோயில்களை குலதெய்வமாக வழிபடும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பிப்24, காலை முதல் இந்த கோயில்களுக்கு வந்து வழிபட்டனர். குழந்தைகளுக்கு மொட்டை போட்டும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழக்குயில்குடி, பன்னியானில் இருந்து சாமியாடுபவர்கள், பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக சென்று காசிவிஸ்வநாதர் கோயிலில் பூஜைகள் செய்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு முழுவதும் பூஜைகள் தொடர்ந்தன. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.