பதிவு செய்த நாள்
27
பிப்
2017
11:02
போடி: திண்டுக்கல் அருகே ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால எண்ணெய் செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தரேவு ஊரின் வடமேற்கு ஐந்து கி.மீ.,தொலைவில் ஓவா மலை உள்ளது. இதில் போடி சி.பி.ஏ.,கல்லுாரி வரலாற்றுதுறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மலை குறித்து மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய பேராசிரியர் சாந்தலிங்கம் கூறுகையில்: ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 9-10 ம் நுாற்றாண்டை சேர்ந்த எண்ணெய் செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் வட்டெழுத்து தமிழ்மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளன. இதனை வெண்பி நாட்டின் குறண்டி என்னும் ஊரைச்சேர்ந்த சோமன் அருளன் என்பவர் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது. குறண்டி என்பது மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில் ஆவியூருக்கு அருகே இருக்கும் குறண்டி எனும் ஊராகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க பராந்கபர்வதம் எனும் மலையில் ஸ்ரீ வல்லம் பெரும் பள்ளி, திருக்காட்டாம் பள்ளி என்ற பெயர்களில் 9-10ம் நுாற்றாண்டு சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் “மாராயன்” என்பது அரசு நிர்வாகத்தில் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் மாராயன் என்ற அதிகாரிக்கு இச்செக்கு உரல் மூலமாக எண்ணெயை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படுவார்கள், என கல்வெட்டு மூலம் எச்சரிக்கை விடப்பட்டதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 1,500 ஆண்டுகளுக்கு முன் இம்மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும், அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகின்றன.மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும், என்றார்.