பதிவு செய்த நாள்
27
பிப்
2017
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த, மயான கொள்ளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை டவுன், அசலியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோவிலில், நேற்று மயான கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி, அங்காளபரமேஸ்வரி அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவரை வண்ண மலர்களால் அலங்கரித்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஈசான்ய மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் நேர்த்திக் கடனாக, உடலில் எலுமிச்சை பழம் அலகு குத்தியும், பராசக்தி அம்மன், காளி அம்மன், சிவபெருமான் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். பின், ஈசான்ய மயானத்தில், பொரி, கடலை, சுண்டல் வகைகள், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் சூறை விடப்பட்டது. இதை, பக்தர்கள் போட்டி போட்டு பெற்றுச் சென்றனர்.