பதிவு செய்த நாள்
27
பிப்
2017
11:02
சென்னிமலை: ஈங்கூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் விழா நடந்தது. சென்னிமலை அருகே, ஈங்கூரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இக்கோவில் சுவாமியை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோவில் பொங்கல் விழா, கடந்த, 21ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, கோவிலின் முன் குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு, சுவாமி திருத்தேர் உலாவும் நடந்தன. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் மயான பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் தீ மிதித்தல் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் தீ மிதித்தனர். காலை, 8:00 மணிக்கு மேல், பொங்கல் விழா நடந்தது.