பதிவு செய்த நாள்
28
பிப்
2017
11:02
கோவை : கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு கம்பத்தில் தண்ணீர் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். நாளை மதியம், 02:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
போக்குவரத்தில் நாளை மாற்றம்: தேரோட்டத்தை முன்னிட்டு, நாளை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்திலிருந்து, கூட்செட் ரோடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும், பெரியகடைவீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, சுக்ரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக கூட்செட் ரோடு, உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பொள்ளாச்சி ரோட்டிலிருந்து திருச்சி ரோடு மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும், உக்கடம் பைபாஸ் வழியாக, கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் சென்று வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும், பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக, உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக, காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.லாரி போக்குவரத்து, காலை 08:00 மணி முதல், இரவு 08:00 மணி வரை, நகருக்குள் தடை செய்யப்பட்டுள்ளது. தேர் வரும் ரோட்டிலுள்ள ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, ஆர்.ஜி.வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும், தங்களது வாகனங்களை தேர்வரும் ரோட்டில் நிறுத்தாமல், மாற்று இடங்களில் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.