பதிவு செய்த நாள்
28
பிப்
2017
12:02
ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர் கோவிலை, நேற்று, பாட்டியம்மை நாளில் இடித்ததால், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையில் இடையூறாக உள்ள விநாயகர் கோவிலை, இடமாற்றம் செய்யக்கோரி, 2014ல், வக்கீல் வடிவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த உயர்நீதிமன்றம், 2014, ஜூலை, 7ல், மாற்று இடம் தேர்வு செய்து, கோவிலை அப்புறப்படுத்தும்படி, கலெக்டருக்கு உத்தரவிட்டது. 2017 ஜன., 25ல், கோவிலை அகற்றாதது குறித்து, சேலம் கலெக்டர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, கடந்த, 17ல், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை அகற்றவில்லை எனில், 20ல் அகற்றப்படும் என, நெடுஞ்சாலைத்துறை, ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன், நோட்டீஸ் வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், கடந்த, 20ல், கோவிலுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, கோவில் அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், கோவில் அகற்றுவதற்கான பணிகளில் நெடுஞ்சாலை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுப்பட்டனர். ராணிப்பேட்டை மக்கள், கோவிலுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அமாவசை நாளில் கோவில் இடிக்கக் கூடாது என, நள்ளிரவு, 12:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, கோவில் முன் தர்ணாவில் ஈடுப்பட்டனர். ஆனால், காலை, 7:30 மணியளவில், ஆத்தூர் தாசில்தார் முருகையன் தலைமையிலான, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள், 100க்கும் மேற்பட்ட போலீசாருடன், கோவில் பூட்டை உடைத்து, கோவில் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.காலை, 8:20 மணியளவில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் உள்ள உண்டியலை தோண்டி எடுத்தனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் உள்ளிட்டோர், மாசி மாத, பாட்டியம்மை நாளில், விநாயகர் கோவில் இடிப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சில பெண்கள், போலீசார், அதிகாரிகள் மீது மண்ணை தூவி சாபம் விட்டனர். பொக்லைன் இயந்திரத்தில், கோவிலின் வடகிழக்கு, மேற்கு பகுதி கட்டடத்தை இடித்தனர். அருகில் இருந்த இரண்டு கடைகள், கோவில் முன்புற இரும்பு கதவுகள், மேற்புற அலுமினிய அட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
கடந்த, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில், 1963ல், விநாயகர் சதுர்த்தி நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆகம விதிகளின்படி, கோவில் கோபுரம் அகற்றிவிட்டு, விநாயகருக்கு பூஜைகள் செய்து, மாற்று இடத்தில் உடனடியாக வைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பெரியார் சிலையை அகற்றாமல், கோவிலை மட்டும் ஏன் அகற்றுகிறீர்கள் என, காலை 11:30 மணியளவில், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்பினர், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அதன்பின், பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். விநாயகர் கோவில் மீண்டும் எங்கு அமைக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்காததால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.