கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலுார், திருப்பாதிரிப்புலியூரில், வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. கடந்த 25ம் தேதி அம்மன் குறத்தி வேடம் பூண்டு மயானம் சென்று வல்லாளக்கண்டன் கோட்டை அழிக்கப்பட்டது. 26ம் தேதி காலை அம்மன் பூதவாகனத்தில் மயானம் சென்று மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உணவுப் பொருட்கள், தானியங்கள் மற்றம் கிழங்கு வகைகள் மற்றும் காய்கறிகளை கொள்ளையிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மாலை விடையாத்தி உற்சவத்தைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.