சாணார்பட்டி: விஞ்ஞானம், தொழில்நுட்பம் என உலகம் ஒருபுறம் நவீனமயமாகி வரும் நிலையில், மற்றொருபுறம் ஆன்மிக வழிபாடும் அளவில்லாமல் வளர்ந்தே வருகிறது. சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி சச்சிதானந்த சுவாமிகள் இதே பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகுடிலில் சிவலிங்கம் வைத்து வழிபட்டு வந்தார். இருஆண்டுகளுக்கு முன் இங்கு பெரிய அளவில் லிங்கேஸ்வரர் ஆலயம் எழுப்பும் எண்ணம் அவருக்கு தோன்றியது. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆன்மிகவாதிகள் கொண்ட குழுவை அமைத்தார். நுாறு லிங்கங்களுடன் கூடிய ஆத்மலிங்கேஸ்வரர் எனும் ஆலயத்தை எழுப்ப முடிவு செய்தனர். இதையடுத்து 1008 சிறிய வகை லிங்கங்களுக்கும் மூலவரான ஆத்மலிங்கேஸ்வரருக்கும் சிலை ஆர்டர் செய்து பணியை துவக்கினர். ஆலயம் எழுப்ப உள்ள இடத்தில் 1008 சிறிய லிங்கங்களை நிறுவி கடந்த பிப்., 12 அன்று காலை சண்டி ஹோமமும் மாலையில் பிரித்தியங்கிரா ஹோமமும் நடந்தது. மறுநாள் காலை 1008 தம்பதிகள் பங்கேற்ற மஹாருத்ர ஹோமம் நடந்தது. இதில் குஜராத் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர். குழுவை சேர்ந்த கணேசன் கூறியதாவது,‘ஹோமம் நடந்த இடத்தில் ஆத்மலிங்கேஸ்வரர் ஆயலம் எழுப்பப்பட உள்ளது. ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 1008 லிங்கங்களும் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்’ என்றார். இவரை 94432 74564ல் தொடர்பு கொள்ளலாம்.