பரமபதம் என்பது எல்லாவற்றினும் உயர்ந்த கதியாய், காண்பவனும், காட்டுவதும், காண்பதுவும் தோன்றாது அனுபவித்து அறிவது எனவும்; சிவசாயுஜ்ஜியம் என்பது சிவனோடு இரண்டறக் கலந்து பிரியாது அவனைப் பெறுவதாகும் எனவும் கூறுவர். காந்தம் இரும்பை இழுப்பதுபோல் உயிர்களை இறைவன் தன் பக்கம் இழுத்துக் கொள்ளுகின்றான். நெருப்பிலிட்ட இரும்பை நெருப்பானது தன்மயமாக்குவதைப்போல உயிர்களை சிவன் தன்மயமாக்குகின்றான். நெருப்பு தன்னில் இட்ட இரும்பின் கறையை நீக்கிச் சுத்திசெய்வதுபோல, ஆண்டவன் தனது அருட்சக்தியால் உயிர்களின் ஆணவத்தை அழித்து முக்தியைக் கொடுக்கிறான். உப்பானது நீரில் கலந்து நீருக்கும் தன் தன்மையை அளிப்பதுபோல, இறைவன் உயிர்களில் லயித்து தனது குணங்களை எல்லாம் கொடுக்கிறான். இரசகுளிகை செம்பிலுள்ள களிம்பை நீக்கிப் பொன்னாகச் செய்வதைப்போல, ஆன்மாவில் ஆணவத்தை நீக்கி சிவமயமாக்குகிறான். கருப்பஞ்சாறு இறைவனும் தேன், பால், கனி, கற்கண்டு முதலியவற்றைக் கலந்து உண்டால் உண்டாகும் இன்பத்தைப்போல ஆன்மா முக்தி இன்பத்தை அனுபவித்து சிவனோடு அத்துவித நிலையில் நின்று சிவனாந்தத்தில் திளைக்கிறது.