முக்தி அடைவதற்குரிய மார்க்கங்களை நான்காகப் பகுத்துள்ளனர். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகைப்படும். இவற்றை முறையே, தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் கூறுவர். இவற்றைக் கர்மம், பக்தி, யோகம், ஞானம் எனக் கூறுவாரும் உளர். இந்நெறிகளை மேற்கொண்டொழுகிய ஆன்மாக்கள் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ஜிய பதவிகளை அடைவர். முற்கூறிய மூன்று பதவிகளும் பதமுக்தியாகும். நான்காவதாகிய ஞானத்தால் அடையும் முக்தி பரமுக்தியாம்.