பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
திருப்பதி: திருமலையில், காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்கள், ஒரு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில், சில புதிய ஏற்பாடுகளை, தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.திருமலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், வைகுண்டம், 1 மற்றும் 2ம் காத்திருப்பு அறைகளில் பல மணிநேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல திறந்து விடப்படுவதால், வைகுண்டம் - 1 அறையில் உள்ள காரிடரில், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.மேலும், தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது; இதை தவிர்க்க, தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்களுக்கு தனித்தனி நேரம் ஒதுக்கப்பட உள்ளது.அவர்களுக்குரிய தரிசன நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில், வைகுண்டம் - 1 காரிடரில் பக்தர்களை திறந்து விட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்காமல் ஒரு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்ப முடியும்.இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த, தேவஸ்தான நிர்வாகம், ஐந்து அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்துஉள்ளது. கோடை விடுமுறையின் போது, இந்த புதிய முறையை அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.