பதிவு செய்த நாள்
13
மார்
2017
02:03
சாந்த குணத்துடன் சாதிக்க முயலும் ரிஷபராசி அன்பர்களே!
சுபகிரகங்களின் பலத்தால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். மனதில் அமைதி நிலைத்திருக்கும். குரு 5ம் இடத்தில் இருந்து தொடர்ந்து சாதக பலனை கொடுப்பார். 11ம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். எதிர்பார்த்த செயல்கள் தடையின்றி நிறைவேறும். பணப்புழக்கத்திற்கு எந்த குறையும் இருக்காது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். அரசாங்க வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.பெண்கள் வகையில் நன்மை உண்டாகும். ஏப்.1,2ல் பெண்களால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மார்ச் 27,28,29ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.5,6ல் புத்தாடை, நகை வாங்க யோகமுண்டு. உடல்நிலை திருப்தியளிக்கும். மருத்துவச் செலவு உண்டாகாது.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் மேம்படும். சிலர் முதலீட்டை அதிகப்படுத்தி வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது திடீர் செலவு ஏற்படலாம். மார்ச் 15,16,17, ஏப்.12,13ல் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். மார்ச் 30,31, ஏப்.3,4ல் பண விரயம் ஆகலாம். ஏப்.11க்கு பிறகு மறைமுகப்போட்டி குறுக்கிடலாம்.
பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக அமையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். மார்ச் 25,26ல் அனுகூலமான பலன் உண்டாகும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக செயல்படுவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற நற்பலனை காணலாம். மார்ச் 14, ஏப்.9,10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். பயணத்தின் போது விழிப்பாக இருப்பது அவசியம். சனி பகவான் முயற்சிகளில் தடைகளை உருவாக்குவார். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
மாணவர்கள் புதனால் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். போட்டியில் பங்கேற்று பாராட்டு, பரிசு கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். நெல், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்களுக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். குரு பகவானால் குடும்பத்தில் குதுõகலாம் உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார உயர்வால் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். சகோதரர்களால் வாழ்வில் மேன்மை உண்டாகும். மார்ச் 18,19ல் நினைத்தது நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும்.
நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,19,25,26,27, 28,29, ஏப். 1,2,5,6,12,13
கவன நாள்: மார்ச் 20,21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,2,3 நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும். புற்றுக்கு பால் ஊற்றி நாக தேவதையை வணங்குங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுங்கள்.