பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
மொடக்குறிச்சி;நேர்மையான நல்ல மனம் படைத்தவர்கள், முறையாக பகவானை தரிசித்து கொண்டிருப்பவர்களுக்கு, கஷ்ட காலத்தில், பகவானின் அனுக்ரஹம் கிடைப்பதுடன், சுகவாழ்வும் கிடைக்கும், என, சிருங்கேரி இளைய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.ஈரோடு மாவட்டம், லக்காபுரம் புதுார், லஷ்மி நாராயணா கோவிலில், சிருங்கேரி சுவாமிகளின் சொற்பொழிவு மற்றும் கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகளின் சீடர், விதுசேகர பாரதீ சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது:மனிதனுக்கு, பகவான் அனுக்ரஹம் எப்போதும் வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். பக்தனுடைய வேண்டுதல் ஒருபோதும் வீண்போகாது. பகவானிடம், பலவிதமான ஆசைகளை நிறைவேற்ற கேட்கக் கூடாது. நல்ல மனம், ஆரோக்கியம், பகவான் அனுக்ரஹம் ஆகியவற்றை கேட்டாலே போதும். ஏதாவது ஒரு ரூபத்தில் பகவான் நமக்கு உதவுவார். ஒரு சிலர் நன்றாக இருக்கும் போது, கடவுளை மறந்து விடுவர். கஷ்டம் வரும்போது கடவுளை வணங்கி உருகுவர்.கஷ்டமோ, லாபமோ எப்போதுமே ஒரே மாதிரியாக வாழ்ந்தால் தான் வாழ்க்கை. ஏற்றம் வரும் போது, இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். தர்மத்தால் பல நன்மைகள் வந்து சேரும். இவ்வாறு அவர் பேசினார்.