பதிவு செய்த நாள்
22
மார்
2017
11:03
சாலவாக்கம்: சாலவாக்கத்தில், மிகவும் பழமையான தீர்த்தக்குளம், உரிய பராமரிப்பின்றி துார்ந்து வருவதை தடுத்து, பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் பகுதியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகாமையில், 1 ஏக்கர்பரப்பில், ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. கோவில்கள் குளத்தங்கரையை சுற்றிலும், திரவுபதியம்மன் கோவில், துலுக்கானத்தம்மன் கோவில், நாகத்தம்மன் கோவில், மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் அமைந்து உள்ளன. குளத்தங்கரையைச்சுற்றி, இத்தனை கோவில்கள் உள்ளதால், இந்தகுளம் தீர்த்தக்குளம் என,பெயர் பெற்றது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை,சாலவாக்கத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், பாலாற்று குடிநீர் திட்டத்திற்கு பின், கவனிப்பார் இல்லாத நிலைக்குள்ளானது.
பூஜைகள்: இதுகுறித்து,சாலவாக்கம் பகுதிவாசிகள் கூறியதாவது: சாலவாக்கத்தில் மிகவும் பழமையான இக்குளம், சுற்றிலும் உள்ள கோ வில்களுக்கு விழா காலத்தில் பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்பட்டது. பல ஆண்டுகளாக, குளம் துார்வாரப்படவில்லை. மேலும், இந்த குளத்தங்கரையில் அமர்ந்து‘குடி’மகன்கள் மது அருந்தி விட்டு, டம்ளர்,உணவு தின்பண்ட காகிதம் மற்றும் தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வீசி செல்வதால்குளம் மாசடைந்து வருகிறது. எனவே ,பழமை வாய்ந்த இக்குளத்தை பராமரித்து, பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.